January 24, 2012

சும்மா தோணிய சில உளறல்

இது பதிவு இல்லைங்க...

சும்மா எல்லார்கிட்டையும் ஹல்லோ சொல்லத் தான் வந்தேன்.

சில நாட்கள் தொடர்ந்து எனக்கு எழுத முடியாமல் போய்விடுகிறது. எழுதுவதற்கும், பேசுவதற்கும், பகிர்வதற்கும் ஒன்றுமே இல்லாமல் போகிறது. அதற்கு என்ன காரணம் என்று என்னால்  ஆராய முடியவில்லை. முழு ஆத்திகவாதி என்று சொல்லிக்கொள்ளும் காலம் வரவில்லை. நிறையவே ஆராய்கிறேன். பகுத்தறிவின் துணையோடு கீறிப்பார்த்து சிலதை ஒதுக்கிவிடுகிறேன். சிலதை சந்தேகக் கண் கொண்டு தோண்டிப் பார்த்து சேர்த்துக் கொள்கிறேன்.

ஆனாலும்...

தொடர்ந்து என் கண்ணனின் (கீதையை உபதேசித்தானே அவன் தான்) பெயரை ஸ்மரித்துக் கொண்டும், ஏதேனும் பாகவதம் சம்பந்தப்பட்ட புத்தங்களை அவ்வப்பொழுது படித்துக் கொண்டும் இருக்கும் சில நாட்களில்..... வார்த்தைகளின்  மேல் ப்ரீதி விட்டுப்போய்விடுகிறது. என்ன எழுதுவது, பேசுவது என்று புரியவில்லை. பேசும் எதுவுமே இல்லாதது போல் ஆகிவிடுகிறது. அவன் ஸ்மரணத்தை அன்றி வேறு எதுவும் அர்த்தமற்றுப் போய்விடுகிறது. பிற விஷயங்களில் மனம் ஈடுபட மறுக்கிறது... இது ஒரு சில நாட்களுக்குத் தான்....தாற்காலிகமாகத் தான்.... அதன் பின்  இயல்பு நிலைக்கு வந்து(வீழ்ந்து?)விடுகிறேன்...

இரு தினங்களுக்கு முன் "கைலாஷ் மானசரோவர் யாத்ரா"வைப் பற்றி  படித்துக்கொண்டிருந்தேன். கைலாஷ்நாத் புகைப்படங்கள் என் நெஞ்சித்தை
விட்டகலாமல் நின்றுவிட்டது.





பொனார் மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல்
மிளிர் கொன்றையணிந்தவனே...
மன்னே மாமணியே
மழபாடியுள் மாணிக்கமே
அன்னே நின்னையலால்
இனி யாரை நினைக்கேனே...


என் தந்தையுமாகிய ஈஸ்வரனின் பொற்பாதம் பணிகிறேன்.

...மீண்டும் பதிவிடுவேன்....


January 04, 2012

"பாஞ்சாலி மணந்த கதை"....அல்லது..... "ஏன்? எதனால்?"


என்ன ஏதென்று பாராமலே, "ஐவரும் பங்கிட்டுக் கொள்ளுங்கள்" கூறியதால்  தாய் சொல் மீறாமல் பாண்டவர்கள் பாஞ்சாலியை மணந்தனர், என்ற  காரணம் ஒப்புக்கொள்ளும் படியாக இல்லை. "இங்கே பாருங்கள் அம்மா, இவள் பெண், வஸ்து அல்ல, அதனால் அவளுக்கு  பிடித்த ஒருவனுக்கே மணம் புரிய சம்மதியுங்கள்" என்று கூறியிருந்தால் விவகாரமே இல்லை. எத்தனையோ பேசியவர்கள் இதையேன் பேச/விளக்க மறந்தார்கள்?

மின்மடல் செய்தியொன்று குறிப்பிடத் தோன்றுகிறது. அனைவரும் படித்திருக்கலாம்.

"பெண்களுக்கு தோதான/பிடித்தமான/ மணப்பதற்கு ஏற்ற ஆண்கள் இங்கு கிடைபார்கள்" என்ற விளம்பரத்தைப் படித்து, பல பெண்கள் உள்ளே நுழைந்தார்களாம். கடைக்குள் நுழைந்த பெண் தேவையான ஆண்மகனை தேர்ந்தெடுக்க முதல்தளம் நோக்கி பயணிக்கிறாள்.  முதல் தளம் இறங்கும் வாயிலில் "இங்கே-அழகான ஆண்கள் உள்ளனர். மேற்கொண்டு தேவைக்கு அடுத்த தளம் செல்லவும்" என்று எழுதியிருந்தது. உடனே அவளும் சரி என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம் என்று இரண்டாம் தளம் ஏறுகிறாள். "இங்கே-அழகும் அறிவும் நிரம்பியவர்கள்" என்று எழுதியிருந்தது. அவளுக்கு மேலும் ஆவல் மேலிடுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும், அழவும், அறிவும், பண்பும் செல்வமும், உயர்ந்து கொண்டே போக, ஐந்து தளங்களைத் தாண்டி ஆறாம் தளத்தின் பொத்தானை அமுக்கிறாள்.

"மன்னிக்கவும்! நபர் எண்ணிக்கை:1001900 . உங்கள் தேவைக்கு எங்களிடம் ஆட்கள் இல்லை. நீங்கள் திரும்பிச் செல்லலாம். நன்றி!" என்றிருந்ததாம்.  பெண்ணின் (மனிதனின்?) திருப்தியற்ற குணத்தை விளக்குவதாக இருக்கிறது இப்புனைவு.

இதே போல் ஆண்களுக்கும் கூட, தனக்கு ப்ரியமானவள் அழகும், குணமும், பண்பும்,  வேலைக்கு செல்பவளாகவும், சமையல் கலையில் நளன் போலும், வீட்டுவேலை தெரிந்தவளும், பெரியோரை மதிப்பவளும், பெற்றோரிடம் விட்டுக் கொடுத்து போகும் குணமுடையாளும், பிறன் மனை நோக்காமல் இருப்பவளும்,  இன்னும் அடுக்கிக்கொண்டே போனால் கை வலிக்கும். தேவைகள் முடிவதில்லை... ....சரி நாம் பாஞ்சாலி கதைக்கு வருவோம்.

'இன்னார்க்கு இன்னார்' என்று எழுதி வைத்த தேவன் எழுத்தின் பேரில்(அல்லது விதி, சான்ஸ், freewill), எடுக்கும் முடிவுகள் வேறுபடுகிறது. குந்தியின் பேச்சைக்கேட்டு ஐவரும் சம்மதித்தனர் என்பது சரியான விளக்கமாக அமையவில்லை. வேறு விளக்கம் உண்டா எனில், திரௌபதியின் பூர்வ கதை விளக்கங்கள் இதற்கு துணை போகின்றன. ஐவரை ஒருத்தி மணப்பதா என கர்ணன் உட்பட பலரும் பழிச்சொல் பேசுகின்றனர். அப்போழுது அங்கு வரும் வியாசர் பாண்டவ்ர்களில் பூர்வ சரித்திரத்தை விளக்குகிறார். ஐந்து தேவர்களாக இருந்தவர்கள், சாபத்தினால் பூலோகம் வந்துள்ளனர். தர்மதேவன், வாயு  இந்திரன், அஸ்வினி தேவர்களுக்கு மகன்களாகப் பிறந்து, நற்செயல் புரிந்து இறைவனை வந்தடைவதாக சிவபெருமான் திருவாய் மலர்ந்திருப்பதாகக் பூர்வக்கதை.

நளனுக்கும் தமயந்திக்கும் மகளாகப் பிறந்த நளாயினி நல்ல கணவனை வேண்டி தவம் புரிகிறாள். பெண்ணுக்கே உரிய ஆவலுடன், தன் கணவனாக தகுதிபெற்றவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விவரிக்க, 'ஒருவனுக்கே இத்தனை குணங்களும் இருப்பது அரிது, ஆகவே நீ ஐவரை மணப்பாய்' என்று சிவன் வரமளிக்கிறார். நல்ல கணவன் அமையப் பெற வேண்டும் என்று ஐமுறை கேட்டு, ஐந்து முறையும் சிவனும் வரமளித்ததால் ஐவரை மணந்தாள் என்றும் புராணம் கூறுகிறது. வருடம் ஒருவருக்கு மனைவியாக இருந்து, மீண்டும் கன்னியாகி இன்னொருத்தருக்கு மனைவியாக வாழ்ந்ததாகவும் குறிப்பு இருக்கிறது. அதனால்  இவள் "நித்திய கன்னி" என்ற பெருமைக்கும் உடையள்.

ஐவருக்கும் உண்மையாக விளங்கியவள், அவர்களை சமமாக பாவித்தாளா? இறுதியாத்திரையாக ஹிமாலயம் செல்லும் வழியில் ஐவருடனும் புறப்படும் பாஞ்சாலியே முதலாவதாகத் துவண்டு இறந்து போகிறாள். ஐவருக்கும் மனைவியானவள், தன்னை முறையாய் வென்ற அர்ஜுனன் பால் அதிக அன்பு கொண்ட பாபத்தின் சுமையால், அவள் பயணம் தடைபட்டது என்று யுதிஷ்டிரர் விளக்குகிறார்.

எந்தக் கதை எப்படியானாலும், வாழ்கையில் பல விஷயங்கள் நம்மை மீறியும், நமக்கு உடன்பட்டும் நடக்கிறது, எதனால் சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன  ஏன் சில சம்பவங்கள் நிகழ்கின்றன என்று விளக்கம் தேட முற்பட்டால், கேள்விகள்  தேங்கியிருக்க, விடை தேடும் படலத்தில் தொலைந்தே போய்விடுகிறோம்.

January 02, 2012

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

கண்ணனும் ஆண்டாளும்


இன்னிக்கு எப்படியானும் அவனை புடிச்சே ஆகணும். மனதில் கருவிக்கொண்டாள் ஆண்டாள்.  தினம் தினம் தோழிகளை வேறு எழுப்பி, அலைக்கழித்து, பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, ஆனாலும் கண்ணுக்கு சிக்காமல் ஓடி ஒளிந்து கொண்டே இருக்கிறானே.. என்ற வருதம் மேலிடுகிறது.

ஆண்டாள்:  இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு  பாத்துடுவோம் வாங்க ஃப்ரெண்ட்ஸ்.

(ஆயர்பாடியில் யசோதா வீட்டில் கண்ணன்- நப்பின்னை ருக்மிணியுடன்)

கண்ணன்:  அம்மா, நாளை காலையில் அவள் வந்தால் நான் தூங்குவதாக சொல்லிவிடுங்கள். (கண்ணன் புன்னகைக்கிறான்)

யசோதா:  யாரைச் சொல்கிறாய்?

க: வேறு யார்!  ஊருக்கு முன் எழுந்து, என்னையும் எழுப்பி பாடாய் படுத்தும் ஆண்டாள் தான்.

ய: நீ தினம் வெண்ணையை சாப்பிட்டுவிட்டு உண்ட மயக்கத்தில் இப்படி  தூங்கினால் என்ன செய்வதாம்?

க: அவள் தரும் ப்ரேமையின் தகிப்பை தாங்க முடியாமல் தானே, நான் பாலும் தயிரும் வெண்ணையுமாக குடிக்கிறேன்... அவள்  பூமாதேவியின் வார்ப்பாம் எனக்காகவே பிறந்ததாகச் சொல்கிறாள்..யாராக இருந்தால் என்ன! ... எனக்கு எல்லாரும் ஒன்று தானே...

ருக்மிணி சாந்தமாக இருந்தாலும் நப்பின்னை கோபத்துடன்: இன்னும் எத்தனை பேருண்டு இப்படி...

க: பல பேர்...உண்டு!  எங்கெல்லாம் என் மேல பரிபூரண அன்பு உண்டொ அத்தனை பேரும் எனக்கு ப்ரியமானவர்கள்.

ந: அவர்களையெல்லாம் பக்தர்களாக மட்டுமே பார்த்தால் போதுமே, உடனே  ப்ரேம  சம்பந்தம்  வரவேண்டுமா..உங்க அண்ணா ராமிடமிருந்து கற்றுக் கொள்ளக் கூடாதா

க: பக்தியில் பல வகை. பிரேம பக்தியும் ஒருவகை. எத்தனை பேர் இருந்தாலும் நான் நித்ய ப்ரம்மச்சாரி என்று உனக்கு தெரியாதா நப்பின்னை? ராம் அண்ணா வேறு நான் வேறு...ஆனாலும் ரெண்டு பேரும் ஒன்று...

ந:  போதும் போதும் நிறுத்துங்கள்.

க: பேசிக்கொண்டே இருந்தால், ஆண்டாள் வரும் நேரம் ஆகிடும். நான் யோக நித்திரையில மூழ்க வேண்டும்.


ஆண்டாள் பாடிய படி வருகிறாள்:

உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன்,
    நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்!
    வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
    பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
    வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

(பாடலுக்கு நன்றி மின்னல்வரிகள் கணேஷ்)

பாடி பாடி எழுப்புகிறாள்...

கண்ணனின் புகழும், பராக்கிரமும், கேட்க கேட்க யசோதை நப்பின்னை, ருக்குமணி, ஏனையோரும் மெய் மறக்கின்றனர்.

ருக்மிணி: "ஆஹா...எல்லோருக்கும் தெரிந்த பராக்கிரமங்களை  நீ இசைக்கும் பொழுது  இன்னமும் இனிமையாகிப் போகிறதே...ஆண்டாள்! எங்கள் கண்ணனையே  ஆளும்  உன்னை ஆண்டாள் என்று சரியாகச் சொன்னார்கள்! இப்பொழுது எங்களையும் உன் இசையால ஆண்டுவிட்டாயடி"

ஆ: ருக்மணி அக்கா, நப்பின்னை அக்கா, யசோதா ஆண்டி...நாலு பஸ் மாறி, விடியக்காலைல உங்க பையனோட ஹிஸ்ட்ரி எல்லாம் மனப்பாடம் பண்ணி, அதை மெனகெட்டு கவிதையாக்கி,  புகழ்ந்து ஐஸ் வெச்சா கூட என்னை கண்டுக்க மாட்டேங்கறானே...


ய: நானே இம்மாத இறுதிக்கு பிறகு பெரியாழ்வரிடம் வந்து உன்னை பெண் கேட்கிறேன்...மார்கழி இறுதி வரை நீ பாடும் பாடலை கேட்க ஆவல் மேலிடுகிறது. அதன் பின்னே தான் திருமணம்.

ஆ: அதுக்கு அப்புறம் அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்...யசோதா ஆண்டி நீங்க தான் சாட்சி...இன்னும் இந்தக் கண்ணன் எழுந்துக்காம என்ன பண்ணிட்டு இருக்கான்..எழுப்புங்க அவனை..ஆண்டாள் கண்ணனின் அருகமர்ந்து அவனை எழுப்ப முயற்சிக்கிறாள்....

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே!
    எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
    உம்பர் கோமானே! உறங்காதெழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
    உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!


(பாடலுக்கு நன்றி மின்னல்வரிகள் கணேஷ்)

 ருக்மிணி,   குடிக்க ஜில் என்று ஜூஸ் கொண்டுவருகிறார்கள். மார்கழி குளிரில் பாடின வாய்க்கு சூடான பால் போதும் என்று பால் மட்டும் அருந்துகிறாள் ஆண்டாள். உலுக்கி உலுக்கி எழுப்பினாலும்...ம்ஹ்ம்... கண்ணன் எழக் காணோம்.

பாடிக்கொண்டிருக்கும் பொழுதே  அவன் அழகில் மயக்கம் ஏற்பட...வந்த நோக்கம் மறந்து கண்ணனின் யோக அழகில் மூழ்கிப்போகிறாள். எத்தனை நேரம் மூழ்கியிருக்கிறாள் என்ற  நினைப்பும் அற்றுப் போகிறது. அதன் பின் விழிப்பு வந்தவளாய் பார்வையை செலுத்துகிறாள்.

தூரத்தே கண்ணன் காளிங்க நர்த்தனம் புரிகிறான்...இன்னும் சற்றுத் தொலைவில் மஹாபாரதக்களத்தில் கீதோபதேசம், இடப்பக்கம் குட்டிச் சிறுமியை ரக்ஷிக்கும் ரோபோவாகிப் போகிறான். வலப்பக்கம், மேற்பக்கம் எங்கு திரும்பினும் கண்ணன். ஆகாயமாய் அளந்து நிற்கும் கண்ணன், துரும்பிலும் ஒளியும் கண்ணன், சின்ன சிறுவனாய் குதூகலிக்கும் கண்ணன், அரக்கனை அழிக்கும் ஆக்ரோஷக் கண்ணன், விஞ்ஞான வளர்ச்சியின் தேடலாய்க் கண்ணன், தினமும் வழங்கும் வாழ்த்தொலியில் கண்ணன், ரூபமாய் அரூபமாய், இருப்பவனாய் இல்லாதவனாய் எங்கும் கண்ணன்....காணக் காண முடிவற்றவனாய்... ஒரு கணம் தடுமாறி திரும்பிப்பார்க்கிறாள்...

பட்டுமெத்தை விரிப்பில் களித்தபடி கண்ணன். இவன் தூங்குகிறான் என்று தானே நினைத்தோம்.  ஆண்டாளுக்கு தான் கண்டதெல்லாம் கனவா என்ற குழப்பம்.

ய: இப்படித் தான்.....அன்றொருநாள் எனக்கு உலகத்தை காட்டி.....ஹ்ம்ம் மாயக்காரன்.

(கண்ணன் விழிக்கிறான், அல்லது விழிப்பது போல் நடிக்கிறான்.)

ஆ: நீ தூங்கினியா இல்ல தூங்கினது போல நடிச்சியா? உன்னை எங்கெல்லாமும் பார்த்தேனே...... இதோ இப்போ கூட, இங்கையும் அங்கையும், எங்கையுமா...

க: நான் தூங்கினால் இயக்கம் என்னாவது .. கண்ணன் சிரித்தான்... அவன் குரல் வந்த திக்கை கண்டுணர முடியவில்லை. திக்கெட்டும் ஒலித்த அந்த குரல், இருந்தது போலும், இல்லாது போலும் எங்கும் நிறைகிறது.

க: நீ போய் மார்கழி முடிந்து வா...நான் உன்னை, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத திருமணம் செய்கிறேன். 

சொன்னபடியே கண்ணனை வாரணம் ஆயிரம் சூழவலம் வந்து கைப்பிடிக்கிறாள்.

~~~~~

"அவன் போக நிலை கூட
ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ" ...

என்ற பாடல் சிடியில் ஒலித்த வண்ணாமிருக்கிறது. தூரத்தில் பெரியாழ்வார் பூப்பறித்துக்கொண்டிருக்கிறார்.

மெல்ல எழுகிறாள் ஆண்டாள்...அத்தனையும் கனவா?!   அடுத்த பாடலாய் உதிக்கிறது.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

அவள் தூங்கிய கனவிலும் அவனே வந்தான். ஆனால் அவனோ தூங்கவே இல்லை.  கண்ணனுக்கேது தூக்கம்!!! அடுத்த பிறப்பில் பாட்டை சிறிதே மாற்றியமைக்க வேண்டும் என்று முடிவு செய்தாள் ஆண்டாள்.